சிங்கப்பூரின் கலாசாரத்தை அலங்கார மிதவைகளுடனும் நடனங் களுடனும் வண்ணமயமாக பொதுமக்களுக்கு தீவு முழுவதும் கொண்டு போய்ச் சேர்க்கும் சிங்கே ஊர்வலம், இம்முறை 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளூர் கலைஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடனக் கலைஞர்களுக்கான போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களுடைய நடனங்களைக் காணொளியாகப் பதிவு செய்து www.chingay.gov.sg/D2 என்ற இணையப் பக்கத்தில் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் பதிேவற்ற வேண்டும். பதிமூன்று முதல் 35 வயது வரையிலானவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். வெற்றியாளருக்கு 1,200 வெள்ளி வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
சிங்கே ஊர்வலத்தின் 50வது ஆண்டைக் குறிக்கும் சிறப்பு நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறுகிறது.
கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் காரணமாக நிகழ்ச்சி இணையம், சமூக ஊடங்கள் வழியாக ஒளிபரப்பப்படும்.
இவ்வாண்டின் சிறப்பு அம்சமாக 'எங்களிடமும் திறனாளர்கள் உண்டு' என்ற அங்கம் இடம்பெறு கிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களுடைய திறமைகளைக் காட்டும் ஒரு நிமிட காணொளியை அனுப்பிவைக்க வேண்டும். வெற்றியாளருக்கு 3,000 வெள்ளி ரொக்கப் பரிசு, பயிற்சி வாய்ப்பு மற்றும் சிங்கே ஊர்வலத்தில் மேடையேற வாய்ப்பும் வழங்கப்படும்.
பொதுமக்களும் தங்களுக்குப் பிடித்தமான காணொளிக்கு இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை வாக்களிக்கலாம்.
புதிய அங்கம் ஒன்று, 17 தொகுதிகளைச் சேர்ந்த குழுவினர், சிங்கே ஊர்வலக் காட்சிக்கு சிறிய மிதவைகளை உருவாக்கி வழங்க வழி செய்கிறது.
புகைப்படப் போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கே ஊர்வலம் பற்றிய புகைப் படங்களை அனுப்பி தங்களுடைய நினைவுகளை மக்கள் பகிர்ந்துகொள்ளலாம். திருமதி ஓங் சூன் முய், 69, என்பவர் சிங்கே ஊர்வலத்தில் தனது நண்பர்களுடன் நடனமாடிய 1973ஆம் ஆண்டின் புைகப்படத்தை அனுப்பியுள்ளார்.
"சாலையின் இரு புறங்களில் மக்கள் நிரம்பி வழிந்தனர். எங்களுடைய உற்சாகத்துக்கு அளவேயில்லை," என்று ஓய்வு பெற்ற நடனமணியான திருமதி ஓங் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியிலிருந்து சிங்கே இணையத் தளத்தில் பொதுமக்களும் புகைப்படங்களை பார்வையிட முடியும்.