சிங்கப்பூரின் ஹோட்டல் துறை குறித்து ஆறு மாதங்களுக்கு ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் இந்த ஆய்வு தொடங்கும்.
ஹோட்டல் துறையின் வர்த்தக அணுகுமுறையை உருமாற்றவும் புதிய வேலைகளை உருவாக்கவும் எதிர்காலத்துக்காக ஹோட்டல்களை மறுவடிவமைக்கவும் இந்த ஆய்வு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வை சிங்கப்பூர் பயணத்
துறைக் கழகம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு ஆகியவை நடத்துகின்றன. 2025ஆம் ஆண்டு வரை ஹோட்டல் துறையில் உள்ள முக்கிய அம்சங்களை இந்த ஆய்வு அடையாளம் கண்டு மதிப்பீடு செய்யும்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஹோட்டல் துறை இந்த ஆய்வை வரவேற்றுள்ளது. ஹோட்டல் துறையின் ஊழியர் பற்றாக்குறை நிலையை கொவிட்-19 சூழல் மோசமடையச் செய்துள்ளது.
ஹோட்டல் துறையில் உருவாக்கக்கூடிய வேலைகள் பற்றியும் தேவையான திறன்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையூறுகளைச் சந்திக்கக்
கூடிய வேலைகள், அறவே இல்லாமல் போகக்கூடிய வேலைகள் ஆகியவற்றை ஆய்வு அடையாளம் கண்டு அவற்றில் இருக்கும் ஊழியர்
களின் திறன் மேம்பாட்டுக்கு பரிந்துரைகளை முன்வைக்கும்.
ஆய்வு மூலம் முன்வைக்கப்படும் பரிந்துரைகளைக் கொண்டு ஹோட்டல் துறையில் மூன்று ஆண்டுகள் வேலைகள் உருமாற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தளவாடம், மொத்த வியாபாரம், கணக்கியல் உட்பட ஆறு துறை
களுக்கான திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹோட்டல் துறையில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, நீடித்து நிலைத்திருக்கும் பயணங்கள், மின்னிலக்கப் பொருளியல் போன்ற புதிய அம்சங்கள் உருவாகி இருப்பதை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் சுட்டியது.
"ஆய்வு மூலம், இந்தப் புதிய அம்சங்களைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளள நாங்கள் விரும்புகிறோம்.
"இத்தகைய வாய்ப்புகளைப் சிங்கப்பூர் ஹோட்டல் துறை பயன்
படுத்திக்கொள்ள தேவையான அணுகுமுறைகளை நடைமுறைப்
படுத்த இலக்கு கொண்டுள்ளோம்." என்று கழகம் கூறியது. மூன்று மனிதவள இலக்குகளை வழிகாட்டிகளாகக் கொண்டு ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் துறையில் உள்ளூர் ஊழியர்களின் விகிதத்தை குறைந்தது ஐந்து விழுக்காடு உயர்த்துவது, ஹோட்டல் துறையில் உள்ள அனைத்து வகை பணிகளிலும் சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல்
சம்பளம் வழங்கும் வேலைகளை உருவாக்குவது, கூடுதல் உற்பத்தித்திறன் கொண்ட, எதிர்காலத்துக்குத் தயாராக இருக்கும் ஊழியரணியை உருவாக்குவது ஆகியவை அந்த மூன்று மனிதவள இலக்குகள்.
கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து ஹோட்டல் துறையில் வேலைக்கு ஆட்களை எடுப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோட்டல் துறையில் 24,700 ஊழியர்கள் இருந்தனர்.
2019ஆம் ஆண்டிறுதியில் 36,300 பேரும் 2010ஆம் ஆண்டில் 33,400 பேரும் ஹோட்டல் துறையில் பணிபுரிந்தனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சுற்றுப்பயணிகளின் வருகை பெரிதளவில் சரிவு கண்டபோது 2020ஆம் ஆண்டில் மட்டும் 710 ஹோட்டல் துறை ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.