போலி ஆவணங்கள் மூலம் $2.67 மி. வங்கிக் கடன் பெற்று மோசடி; நிறுவன இயக்குநருக்கு 30 மாத சிறைத் தண்டனை

2 mins read
735408c1-e856-4364-9d00-b9a0b12483e1
-

நிறு­வ­னம் ஒன்­றி­டம் இருந்து காய்­க­றி­களை வாங்­கி­ய­தாக போலி ஆவ­ணங்­கள் தயாித்து $2.67 மில்­லி­யன் வர்த்­த­கக் கடன் பெற்று மோசடி செய்த குற்­றத்­திற்­காக மற்­றொரு நிறு­வன இயக்­கு­ந­ருக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் 30 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

டே கிம் யோங், 52, எனப்­படும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இரு காய்­கறி விற்­பனை நிறு­வ­னங்­களை நடத்தி வரும் டான் டெக் தியாங், 54, என்­ப­வரை அணுகி அவ­ரது நிறு­வ­னத்­தில் காய்­க­றி­கள் வாங்­கி­ய­தாக ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்­துத் தரு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

வர்த்­த­கப் பங்­காளி என்­ப­தால் டேயின் கோரிக்­கையை டான் ஏற்­றுக்­கொண்டு அதற்­கேற்ப போலி ஆவ­ணங்­களை வழங்­கி­னார்.

பொருள்­கள் வாங்­கி­ய­தாக ஆவ­ணத்­தில் குறிப்­பி­டப்­பட்டு இருக்­கும் தொகைக்கு நிக­ராக டே வங்­கி­யின் கடன் கேட்டு விண்­ணப்­பிப்­பார். டானின் வர்த்­த­கக் கணக்­கில் வங்கி அந்­தத் தொகையை வரவு வைக்­கும். பின்­னர் அந்­தத் தொகை டேயின் நிறு­வ­னக் கணக்­கிற்கு மாற்­றப்­படும். வங்­கிக் கட­னைத் திருப்­பிச் செலுத்த வேண்­டி­யது ேடயின் பொறுப்பு.

இவ்­வாறு 23 போலி ஆவ­ணங்­களை டானின் நிறு­வ­னம் தயா­ரித்­தது. அவற்­றின் அடிப்­ப­டை­யில் ஓசி­பிசி வங்கி $1.46 மில்­லி­யன், யுஓபி வங்கி $727,735.57, மே பேங்க் $484,000 கடன்­களை வழங்­கின. அவற்­றில் குறிப்­பி­டத்­தக்க அளவு தொகை திருப்­பிச் செலுத்­தப்­பட்டு உள்­ளது.

2020 ஜன­வரி 13ஆம் தேதி டேயின் நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிய அதி­காரி ஒரு­வர் இந்த மோசடி குறித்து காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து அது வெளிச்­சத்­திற்கு வந்­தது.

டே தம்மீது சுமத்­தப்­பட்ட ஏழு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார். இதர 16 குற்­றச்­சாட்­டு­களை நீதி­மன்­றம் கவ­னத்­தில் எடுத்­துக்­கொண்­டது. மோச­டிக்கு ஒத்­து­ழைத்த டான் குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­கள் எத­னை­யும் குறிப்­பி­ட­வில்லை.