புத்தாக்க முறையில் சிந்தித்து, ஏதேனும் வியாபாரம் தொடங்க வேண்டும், சமூக ஊடகத்தில் முத்திரை பதிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் கொண்ட இளையர்களுக்கு, எவ்வாறு அவற்றைச் செயல்படுத்துவது என்று தெரியாமல் இருக்கலாம். இதற்கு தமிழர் பேரவையின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'டி டாக்கீஸ்' என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கைகொடுத்திருந்தது.
புகைப்படம் எடுத்தல், புத்தாக்க இயக்கம், இசை, ஆடை, சிகை மற்றும் ஒப்பனை அலங்காரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இளையர்களுக்கு அவர்
களுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ள ஒரு தளமாக இந்தக் கலந்துரையாடல் அமைந்தது. தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள இமாஜினேஷன் அறையில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று முப்பதுக்கும் மேற்பட்ட இளையர்கள் கூடினர். நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தங்களுக்கு ஆர்வமுள்ள பிரிவுகளில் உள்ளவர்களிடம் அத்துறையைப் பற்றிய தங்களின் கேள்விகளை முன்வைத்துத் தகவல் அறிந்தனர்.
"புகைப்படம் எடுத்தல், புத்தாக்க இயக்கம், இசை, ஆடை, சிகை மற்றும் ஒப்பனை அலங்காரம் ஆகிய துறைகளில் கால் பாதிக்க விரும்பும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்தோம். இத்துறைகள் மூலமாக தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பும் இளையர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கலந்துரையாடலை நடத்தினோம்," என்று 'டி டாக்கீஸ்' கலந்துரையாடலின் திட்ட இயக்குநர் அந்தோணி ஹாஷ்வின் கூறினார்.
புகைப்படத் துறை, ஆடை, சிகை மற்றும் ஒப்பனை அலங்காரத் துறை, இசைத் துறை, புத்தாக்கத் திட்டமிடல் துறை என நான்கு துறைகளில் ஒவ்வொரு துறையையும் பிரதிநிதித்து, அரவிந்த்குமார், கேசவன் உடையப்பன், சத்யா நல்லையா, காமினி சுப்பிரமணியம் ஆகிய நால்வரும் கலந்துரையாடலில் நிபுணர்களாக கலந்துகொண்டனர்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுதல், முயற்சியெடுத்தல் ஆகியவையே வெற்றிக்கான முதல் படிகள் என்று வலியுறுத்தினார் இசை நிபுணர் சத்யா நல்லையா.
"நம்மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இசைக்கு வரையறைகள் கிடையாது, ஆனால் நிலைத்தன்மை முக்கியப் பங்களிக்கிறது. இசையில் ஆர்வமுள்ள இளையர்கள் அந்த முதல் படியை எடுத்துவைக்க வேண்டும், நுட்பங்களைக் கற்றுக்கொண்டு முன்னேற, தொடர்ந்து நல்ல இசையை உருவாக்க முயல வேண்டும்," என்று கூறுகிறார் சத்யா.
ஆற்றலை அறிந்திருத்தல்
நம் திறன்களை வளர்த்துக்கொள்ள பல்வேறு வழிகள், ஊடகங்கள் இருக்கும் வேளையில், நம்மைத் தனித்துக் காட்டுவது என்ன என்பதை அடையாளம் கண்டு, அதை ஓர் அடித்தள
மாகக்கொண்டு செயல்படுவதே அவசியம் என்றார் புகைப்படத் துறை நிபுணர் அரவிந்த்குமார்.
"நம்மால் என்ன முடியும், முடியாது என்பதை அடையாளம் காண வேண்டும். புகைப்படத் துறையில் சாதித்தவர் பலர், ஆகையால் இதை முழுநேர வேலையாகச் செய்ய விரும்பினால் விடாமுயற்சி இருப்பது மிக முக்கியம். ரசிகர்களின் விருப்பங்களை அறிந்துகொள்வதுடன் நம் சிறப்புகளை அறிந்து அவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் நம்மை மேம்
படுத்திக்கொள்வது அவசியம்," என்று கூறுகிறார் வின்சேனிட்டி (Vindsanity) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த்குமார்.
லட்சியத்தில் தெளிவு
தனித்துவமிக்க படைப்புகளைப் புத்தாக்க முறையில் எவ்வாறு படைக்கலாம் என்பதைப் பற்றி பேசிய முழுநேர ஆசிரியர் காமினி சுப்பிரமணியம், முழுநேர வேலை ஒன்றில் இருந்துகொண்டே ஒரு தெளிவான இலக்கும் ஆசையும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்று குறிப்பிடுகிறார். நேரத்தை எப்படி ஆக்கபூர்வமான முறையில் வகுக்கலாம் என்பது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
வலுவான வாடிக்கையாளர் ஆதரவு
பகுத்தறிவுடன் இலக்குகளை அமைத்துக்கொள்வது ஒரு முக்கிய அம்சம் என்று கூறுகிறார்
கேசவன் உடையப்பன். ஆடை, சிகை மற்றும் ஒப்பனை அலங்
காரத் துறையில் ஒருவர் வளர்ச்சி காண பொறுமையும் பயிற்சியும் அத்தியாவசியம் என்றும் இவர் கூறுகிறார். புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்கு ஒப்பனையாளராகப் பணிபுரிந்துவரும் இவர், வலுவானதொரு வாடிக்கையாளர் வட்டத்தைக் கொண்டிருப்பது முக்கியம் என்று கருதுகிறார்.
நான்கு துறைகளிலும் ஆர்வமுள்ள இளையர்களுக்குத் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவதற்கும் ஆலோசனை பெறுவதற்கும் இது சிறந்ததோர் ஒன்றுகூடல் தளமாக அமைந்திருந்தது.
"சமூக ஊடகத் தளங்களுக்காக முக்கியத் தகவல்களையும் சிறந்த குறும்படங்களையும் தயாரித்து வழங்கவேண்டும் என்பது என் விருப்பம். அந்த விருப்பத்தை எவ்வாறு சிறந்த முறையில் செயல்
படுத்தலாம் என்பதை அறிந்திட இந்த நிகழ்ச்சி எனக்கு வாய்ப்பளித்துள்ளது," என்று கூறினார் கலந்துரையாடலில் பங்கேற்ற பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி சஹானா ராஜு.
வந்திருந்த இளையர்களுக்கும் நான்கு துறைகளைச் சார்ந்த நிபுணர்களுக்கும் இடையே இலக்கு
களைப் பற்றிய தரமான ஒரு பகிர்வு நிகழும் வண்ணம் பாதுகாப்பான ஒரு சூழலை அமைத்துக்கொடுத்ததில் தான் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார் தமிழர் பேரவையின் இளையர் பிரிவு தலைவி ஷெரீன் பேகம்.
இதுபோன்ற கலந்துரையாடல் மூலம் இளையர்களால் தங்களுடன் ஒத்த சிந்தனையுடைய மற்றவர்களைச் சந்திக்க முடிகிறது, விருப்பமான துறையில் தங்களை மேம்
படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உற்சாகத்தையும் தருகிறது.
செய்தி: காயத்திரி காந்தி
படங்கள்: திமத்தி டேவிட்