வரி செலுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களைக் கோரும் மின்னஞ்சல் மோசடி
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அனுப்பியதுபோல் தோற்றமளிக்கும் மோசடி மின்னஞ்சல் குறித்து ஆணையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் அதன் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
‘noreply@u.iras.gov.sg’ எனும் மின்னஞ்சல் முகவரியில் இருந்து அது அனுப்பப்பட்டிருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
அந்த மின்னஞ்சலில் வரி செலுத்துவோர் தங்களின் ஆக அண்மைய தனிப்பட்ட விவரங்களைப் பதிவிட உதவும் இணைப்பு இடம்பெற்றிருக்கும்.
இணைப்பு அடுத்த 12 மணி நேரத்தில் காலாவதியாகிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
‘சிங்கப்பூர் அரசாங்கம்’ என்று அதில் கையொப்பம் இடப்பட்டு இருக்கும்.
அதனைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் அந்த இணைப்பைப் பயன்படுத்தி தனிப்பட்ட விவரங்ளையோ கடன்பற்று அட்டை அல்லது வங்கிக் கணக்கு விவரங்களையோ சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கட்டணங்கள் ஏதும் செலுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போலி மின்னஞ்சல் குறித்து நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்ததாக ஆணையம் சொல்லிற்று.
யாரும் அதன் மூலம் ஏமாற்றப்பட்டதாகத் தகவல் இல்லை என்று அது கூறியது.
போலி மின்னஞ்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்கும்படி ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.
தனிப்பட்ட தகவல்களை ஆணையம் ஒருபோதும் மின்னஞ்சல் வழியாகப் பெறுவதில்லை என்பதை வரி செலுத்துவோருக்கு அது நினைவுபடுத்தியது.