சிங்கப்பூரில் துவாஸ் பகுதியில் திங்கட்கிழமை காணப்பட்ட சுழற்காற்று பற்றி கருத்து கூறிய வல்லுநர்கள் அது நீர்த்தாரை என்று தெரிவித்தனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் டெய்லர், மிக பலமான இடி, மின்னலுடன் காற்று வீசும் போது அதோடு சேர்ந்து எப்போதாவது இத்தகைய சூறாவளி நீர்த்தாரை ஏற்படுவதுண்டு என்று தெரிவித்தார்.
இதனிடையே, துவாசிற்கு மேற்கே உள்ள கடலிலும் துவாஸ் துறைமுக கட்டுமான இடத்திற்கு அருகேயும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
பொதுவாக நீர்த்தாரை 10 நிமிடம் நீடிக்கும். சில நேரங்களில் ஒரு மணி நேரம் கூட நீடிப்பதுண்டு.
தரையை நெருங்கும்போது அது வேகமாக மறைந்துவிடும் என்று நிலையம் விளக்கியது.
திங்கள்கிழமை வீசிய காற்று 100 கிலோ எடையுள்ள பொருள்களை தூக்கி 20 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை அப்பால் போட்டுவிடக்கூடிய அளவுக்கு வலுவாக இருந்தது என்று உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்தது.
இதன்தொடர்பில் கேட்டபோது துவாஸ் துறைமுக கட்டுமான இடத்தில் எந்தவொரு சாதனத்திற்கும் பாதிப்பு இல்லை என்றும் யாரும் காயமடையவில்லை என்றும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
துவாஸ் பகுதியில் தோன்றிய நீர்த்தாரை சுமார் 8 நிமிடம் நீடித்தது. அது பற்றி எச்சரிக்கப்பட்ட உடனேயே ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்றும் ஆணையம் கூறியது.