நொடிப்புநிலைச் சட்டத்தின்கீழ் மருத்துவர் கோ செங் ஹெங் மீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் நொடித்துப்போனவர் என்று 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
68 வயது கோ, பிபிபி லேசர் மருந்தகங்களை நிறுவியவர்.
தமக்குக் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும் நோக்கில் பல மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகளை அவர் தன் குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.
செந்தோசா வீடு ஒன்றில் இருந்த அவரது பங்கை $5.25 மில்லியனுக்குத் தன் மனைவியின் பெயருக்கு கோ மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செந்தோசாவில் கூட்டுரிமை வீடு ஒன்றைத் தன் மகனின் பெயரில் $5.8 மில்லியனுக்கு அவர் வாங்கியதாகவும் $1.87 மில்லியனை மகனின் வங்கிக் கணக்கில் போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் செல்லாது என்று பிறகு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு ஜனவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோ மீது சுமத்தப்பட்டுள்ள பெரும்பாலான குற்றச்சாட்டுகளின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.