சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு காலத்துக்குப் பிறகும் பரிவு, பங்களிப்பு, அறப்பணி போன்ற உணர்வுகளை தொடர்ந்து பேண வேண்டும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து உள்ளார்.
நோன்பு காலத்தில் எளியோரின் வாழ்க்கையை மேம்படுத்தும் முஸ்லிம் சமுதாயத்தின் பணிகளை அவர் செவ்வாய்க்கிழமை (எப்ரல் 9) வெளியிட்ட தமது நோன்புப் பெருநாள் செய்தியில் பாராட்டினார்.
“‘சலாம்எஸ்ஜி கிவ்ஸ்’ நடவடிக்கை வாயிலாக, தேவையுள்ள குடும்பத்தினருக்கு உதவினோம். அதன்மூலம் அந்தக் குடும்பங்களும் பண்டிகையின் கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியும்,” என்று மலாய் மொழியில் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் வழிநடத்தக்கூடிய ‘சலாம்எஸ்ஜி கிவ்ஸ்’ நடவடிக்கை மூலம், தேவை உள்ளோருக்கு நோன்புப் பெருநாளுக்குத் தேவையான பொருள்களும் உணவுப்பொருள்கள் அடங்கிய கூடையும் வழங்கப்படுகின்றன.
“அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளிலும் நமது சமுதாயம் பங்களித்து உள்ளது,” என்றார் திரு மசகோஸ்.
அவர் மேலும் கூறுகையில், “தேவை உள்ளோரை அரவணைத்து அவர்களிடம் தாராள மனப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நமது சமூகம் கடைப்பிடிக்கும் துடிப்பான நாட்டுப்பற்றின் சாராம்சம்.
“முஸ்லிம் பெருமக்கள் விரைவில் ‘வாக்காஃப் மஸியாராக்காத் சிங்கப்பூரா’ என்னும் சமூக அறப்பணி நிதி மூலம் வருங்காலத் தலைமுறைக்குப் பங்களிக்கும் வாய்ப்பைப் பெற உள்ளனர்.
“சமயக் கல்விக்கூடங்கள், சமய போதகர்கள் மற்றும் சமூகத் திட்டங்களின் மேம்பாடு ஆகியவற்றுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கம் கொண்ட இந்த நிதி விரைவில் தொடங்கப்பட உள்ளது,” என்றார் திரு மசகோஸ்.
அவரது நோன்புப் பெருநாள் செய்தி மலாய் தொலைக்காட்சி ஒளிவழியான சூர்யாவிலும் கம்போங் கிளாமில் உள்ள ஹஜ்ஜா ஃபாத்திமா பள்ளிவாசலிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நீடிக்கும் காஸா போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் பொருட்டு நோன்பு காலத்தில் நிதி திரட்டுவதற்காக உள்ளூர் அறநிறுவனமான ‘ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம் (ஆர்எல்ஏஎஃப்), ஐநா குழந்தைகள் நிதியத்துடன் கைகோத்துள்ளது.
போர் தொடங்கிய 2023 அக்டோபர் மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் ஆர்எல்ஏஎஃப் மொத்தமாக $8,114,422 நிதி திரட்டியது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கூட்டறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை வெளியிட்டன.
பரிவு மற்றும் நல்லிணக்கத்தை மேன்மேலும் ஏற்படுத்த முயல வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்துக்கு அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
“காஸா பூசலுக்கு மத்தியில் பரிவு, ஒற்றுமை, நன்றியுணர்வு போன்றவற்றின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூரக் கடமைப்பட்டவர்கள்.
“மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டிக்கும் நாம் உடனடி போர்நிறுத்தத்திற்கு சிங்கப்பூருடன் இணைந்து அழைப்பு விடுக்கிறோம்.
“மனிதகுல மனங்களில் அமைதியையும் கண்ணியத்தையும் இந்த நோன்புப் பெருநாள் நிலைநாட்டட்டும்,” என்று கூட்டறிக்கை தெரிவிக்கிறது.