ஈரச்சந்தையில் பன்றி இறைச்சிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை முதலாளியிடமிருந்து கிட்டத்தட்ட $735,000 திருடியவருக்கு 42 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1லிருந்து 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிவரை நடைபெற்றுள்ளது.
இதில் ஈடுபட்ட சீன நாட்டவரான சன் சாவ், வயது 39, தான் வேலை பார்த்த ஜேஎம்எஸ் டிரேடிங் அண்ட் சப்ளைஸ் என்ற நிறுவனத்திடம் $40,000 திருப்பித் தந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நீதிபதி வெள்ளிக்கிழமை (மே 24) அன்று மூன்று ஆண்டுகள், ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
திரு சன் $565,000க்கு அதிகமான இரண்டு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு எதிரான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
திரு சன் ஜேஎம்எஸ் டிரேடிங் அண்ட் சப்ளைஸ் நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டுவாக்கில் வேலைக்கு சேர்ந்ததாக துணை அரசு வழக்கறிஞர் கோ யி வென் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உட்லண்ட்ஸ் அவென்யூ ஆறில் உள்ள அந்நிறுவனத்தில் மேற்பார்வையாளராக தொடர்ந்தார்.
தினமும் பிற்பகல் 1.00 மணி வாக்கில் திரு சன் அன்றைய வருவாயை சரிபார்த்து பணத்தை நிறுவனப் பிரதிநிதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1லிருந்து டிசம்பர் 31வரை அவர் கிட்டத்தட்ட $196,000ஐ களவாடினார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1லிருந்து டிசம்பர் 31வரை மொத்தமாக கிட்டத்தட்ட $370,000வரை திருடினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.