தோ பாயோ கிடங்கு விபத்து: அனுமதியில்லாமல் சேர்க்கப்பட்ட இடைத் தளம்

தோ பாயோ கிடங்கு விபத்து: அனுமதியில்லாமல் சேர்க்கப்பட்ட இடைத் தளம்

1 mins read
6fd67d63-056b-48be-94aa-5248ff461b52
தோ பாயோ சரக்கு கிடங்கில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். - படம்: ஃபேஸ்புக்/ எஸ்சிடிஎஃப்
Google News Preferred Icon

கடந்த ஜனவரி மாதம் விபத்து நிகழ்ந்த தோ பாயோ சரக்குக் கிடங்கில் இடைத் தளம் சேர்க்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிடமோ அல்லது கட்டட கட்டுமான ஆணையத்திடமோ அனுமதி கோரப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி எண் 11 தோ பாயோ தொழில் பூங்காவில் உள்ள சரக்குக் கிடங்கில் தரைத் தளம் இடிந்தது. அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்ட தரை விரிப்புகளில் மூவர் சிக்கிக் கொண்டனர். இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து ஜனவரி 28, 31 தேதிகளில் குடிமைத் தற்காப்புப் படை அந்த இடத்தில் சோதனை நடத்தியது. அப்போது இடைத் தளத்திற்கு தீப்பாதுகாப்பு சான்றிதழ் பெறப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

தீப்பாதுகாப்பு சட்டத்தின்படி தங்களுடைய இடத்தில் கூடுதலாக சேர்க்க விரும்பினாலோ அல்லது மாற்றம் செய்ய விரும்பினாலோ தீப் பாதுகாப்புக்கான அனுமதியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிடமிருந்து பெற வேண்டும்.

கட்டடத்தின் உரிமையாளர்கள் அல்லது பொறுப்பானவர்கள் நிபுணர்களை அமர்த்தி திட்டத்தைத் தயாரித்து குடிமைத் தற்காப்புப் படையிடம் அங்கீகாரத்துக்குச் சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விக்கு பிப்ரவரி 9ஆம் தேதி குடிமைத் தற்காப்புப் படை பதிலளித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
சரக்குவிபத்துதோ பாயோ