பேங்காக்: சிங்கப்பூரின் மிக்கெல் லீ ஆண்களுக்கான 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் 21.92 வினாடியில் முடித்து, வெற்றி பெற்று ஆசியானின் ஆக வேகமான நீச்சல் வீரரானார்.
டிசம்பர் 11ல் ஹுவாமார்க் நீச்சல் நடுவத்தில் போட்டி நடந்தது. லீக்கு அடுத்தபடியாக அவரது அணி வீரர் தியோங் ட்ஸென் வெய் எடுத்துக்கொண்ட நேரம், 22.42 வினாடி. அவருக்கு அடுத்து மலேசியாவின் டோங் யூ ஜிங், 22.48 வினாடியில் போட்டியை முடித்துக்கொண்டார்.
முந்தைய நாள் 100 மீட்டர் எதேச்சை பாணி அங்கத்தில் தங்கம் வென்ற பிறகு, தாய்லாந்து விளையாட்டுப் போட்டிகளில் இது லீ பெற்றுள்ள இரண்டாவது தங்கம் ஆகும். முதல் நாளில் ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருந்த சிங்கப்பூர் தேசிய நீச்சல் வீரர்களுக்கு லீயின் வெற்றி, ஊக்கத்தைத் தந்துள்ளது.
ஆண்களுக்கான 50 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியில் குவா ஜெங் வென், 25.43 வினாடியில் வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 50 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியில் ஃபிலிப்பினோ-கனடிய வீராங்கனை கேலா சான்சேஸ் காலையில் நடந்த தகுதிச் சுற்றில் 28.47 வினாடியில் சாதனைபடைத்தார்.
இருந்தபோதும், இறுதிப் போட்டியில் அவர் மூன்றாம் இடமே பிடித்திருக்கிறார். மாறாக, இந்தோனேசியாவின் மஸ்னியாரி வொல்ஃப் 28.80 வினாடியில் தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
தாய்லாந்தின் சாவோவானி பூனம்ஃபா, சான்சேஸ் இருவரும் 28.84 வினாடியில் கடந்து கூட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
சிங்கப்பூரின் 19 வயதான லெவேனியா சிம், தனது முதல் தென்கிழக்காசி விளையாட்டு இறுதிப் போட்டியில் 29.86 வினாடியில் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

