ராமநாதபுரம்: சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் 4 ஐயப்ப பக்தர்கள் உள்பட ஐவர் உயிரிழந்தனர்; எழுவர் படுகாயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் ராமநாதபுரம் அருகே நிகழ்ந்தது.
ஆந்திராவில் இருந்து ஐந்து ஐயப்ப பக்தர்கள் ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் ராமேசுவரம் நோக்கிச் சென்றனர்.
நீண்ட பயணத்தால் சோர்வடைந்த அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கீழக்கரை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே காரை நிறுத்தினர்.
பக்தர்கள் அனைவரும் காருக்குள்ளேயே தூங்கினர்.
அப்போது ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி படுவேகத்துடன் வந்த மற்றொரு கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் பின்னால் பயங்கரமாக மோதியது.
அப்போது அந்த காரில் ஏழு பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினர்.
அந்த காரை ஓட்டிச் சென்ற முஷ்டாக் அகமது, 30, படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆந்திரா காரில் இருந்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
கீழக்கரையைச் சேர்ந்த ஆறு பேர் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என ஏழு பேர் பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அறிந்த கீழக்கரை காவல்துறையினர் விரைந்து சென்று உள்ளூர் மக்களின் துணையுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை அவர்கள் வெளியிட்டனர்.
ஓட்டுநர் முஷ்டாக் அகமது தவிர, ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ராமச்சந்திர ராவ் 55, அப்பாரோ நாயுடு 40, பண்டார சந்திரராவ் 42, ராமர் 45 ஆகியோரையும் சேர்த்து ஐவர் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேகமாக வந்து ஆந்திரா கார்மீது மோதிய கார் கீழக்கரை நகரமன்றத் தலைவருக்குச் சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்தது.

