சென்னை: தமிழ்நாட்டின் சாலைகளில் கைக் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவில், “சென்னையில் பெரும்பாலான சாலைகளில் பச்சிளம் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்கள், அந்தக் குழந்தைகளின் உண்மையான தாய்தானா என்பதை கண்டறிந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
“அந்தப் பெண்கள் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
“அவ்வாறு பிச்சை எடுப்பதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்,” என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

