விருதுநகர்: பறை இசை பற்றிய கல்வியை பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, வேலு ஆசானுடன் இணைந்து பறை இசைத்தார்.
அதைத் தொடர்ந்து பாரதி பறை பண்பாட்டு மையத்தை ஆளுநர் ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.
பின்னர் உரையாற்றிய ஆளுநர் ரவி, “சங்க இலக்கியங்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரம்பரிய இசை போற்றப்பட்டுள்ளது. பறை இசை அதன் சிறப்பு குறையாமல் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.
“இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு பறை இசையை கற்றுக் கொடுத்து அதனை மேலும் வளர்க்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் அரங்கேற்றம் செய்ய நான் அழைப்பு விடுக்கிறேன். பள்ளிப் பாடத்திட்டத்தில் பறை இசை பற்றிய கல்வியைச் சேர்க்க வேண்டும். பறை இசை குறித்து முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
“2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். அப்போது நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டைக் கொண்டாடும். அவ்வேளையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும், உலகம் முழுவதும் பறையிசையின் ஓசை கேட்க வேண்டும். இதை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும்,” என்று ரவி கூறினார்.

