மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலுக்கு கோவை போலிசார் தேசியக் கொடி அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை - திருச்சி சாலையில் மின்மாற்றி ஒன்றின் மீது அமர்ந்த மயில் மீது உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்தது. அதனால் உடல் கருகி உயிரிழந்த மயில் மின் கம்பிகளுக்கு இடையே சிக்கித் தொங்கியது.
இந்தியாவின் தேசியப் பறவையான மயில் இறந்த செய்தி போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்காநல்லூா் ஆய்வாளா் முனீஸ்வரன், உதவி ஆய்வாளா் அா்ஜுன்குமார், தலைமைக் காவலா் சுகுமார் ஆகியோர் மின்மாற்றியில் சிக்கிய மயிலின் உடலை மீட்டனர்.
தேசியப் பறவை என்பதால் இறந்த அந்த பெண் மயிலுக்கு தேசியக்கொடியைப் போர்த்தி காவல் துறையினர் உரிய மரியாதை செலுத்தினர்.
மதுக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மயிலின் உடலை, அதிகாரிகள் வனப்பகுதியில் புதைத்தனர்.