கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ராமச்சந்திராரெட்டி, 65.
இவரது வீட்டின் அருகே, நாள்தோறும், இரை தேடி ஆண் மயில் ஒன்று வந்து சென்றது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி, பாலாஜி, 33. நேற்று முன்தினம் மதிய வேளையில் அங்கு வந்த மயிலின் அருகே சென்று, தமது கைபேசியில் மயிலுடன் சேர்ந்து ‘செல்ஃபி’ எடுக்க முயற்சிசெய்தார்.
அப்போது, மயில் திடீரென பாலாஜியின் இடது கண்ணை கொத்தியது.
இதில் காயமடைந்த அவர், ஓசூர் தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவரது இடது கண்ணில் பார்வை கிடைப்பது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த மயிலை நேற்று காலை பொதுமக்கள் பிடித்தனர்.
இதையறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மயிலை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.