துபாயிலிருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த ஏர்இந்தியா சிறப்பு விமானத்தில் பயணம் செய்த 8 பேர் 4.15 கிலோ எடையிலான தங்கத்தைக் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவர்கள் அனைவருக்கும் 'எக்ஸ்ரே' படம் எடுத்துப் பார்த்ததில் அவர்கள் தங்க மாத்திரை உருண்டைகளை விழுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் ‘இனிமா’ கொடுத்து அவர்கள் விழுங்கியிருந்த 161 மாத்திரைகள் எடுக்கப்பட்டன. 4.15 கிலோ தங்க மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ.2.17 கோடி. தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திருச்சியைச் சேர்ந்த கனகவள்ளி, நிஷாந்தி, கலா, பாத்திமா, புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ், ஜெகதீஷ், கபர்கான், ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ஹக்கீம் ஆகிய அந்த 8 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அனைத்துலக தங்கம் கடத்தும் கும்பல் வழங்கிய குறைந்த அளவு பணத்திற்காக தங்க மாத்திரைகளைக் கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.