மதுரை: உலகப்புகழ்பெற்றதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அந்த ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூருக்கு அருகே மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.
அதன்படி அலங்காநல்லூர் அருகேயுள்ள சிற்றூரான கீழக்கரையில் வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடியில் மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அரங்கத்தை புதன்கிழமை (24.4.2024ஆம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.. அதன்பின் அரங்கத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கும்.
அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற 9,312 காளைகளும், 3,669 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில் தகுதியான மாடுபிடி வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர். அதே போல் காளைகளும் சோதனைகளுக்குப் பிறகு போட்டியில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும்.
24ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள், திறப்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.