டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட அந்நாட்டின் பல இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது ஐவர் மாண்டதாக அந்நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 21) வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவில் 5.7 எனப் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மாண்டோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
பங்ளாதேசை ஒட்டி உள்ள இந்திய மாநிலங்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.
கட்டடங்கள் குலுங்கியதால் டாக்காவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் குடிசை வீடுகள் போன்ற தற்காலிக கட்டமைப்புகளைக் கொண்டவை இடிந்து விழுந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தனர்.
“நாங்கள் ஒரு வலுவான அதிர்வை உணர்ந்தோம். கட்டடங்கள் மரங்களைப் போல அசைந்தன. மக்கள் கட்டங்களைவிட்டு வேகமாக இறங்க முயன்றதால் படிக்கட்டுகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பயத்தில் பிள்ளைகள் கதறி அழுதனர்,” என டாக்காவாசி சுமன் ரகுமன் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.

