கோலாலம்பூர்: ஏர்ஏஷியா விமானத்தில் அடுத்த ஆண்டு (2026) நீங்கள் ஏறும்போது சிப்பந்திகளின் சீருடையில் வித்தியாசத்தைப் பார்க்கலாம். பெண் சிப்பந்திகளில் சிலர் தலையங்கியை அணிந்திருக்கக்கூடும்.
விமானச் சிப்பந்திகளின் சீருடையில் புதிய மாற்றம் அறிமுகம் காணவிருக்கிறது. அதன்படி முஸ்லிம் சிப்பந்திகள் தலையங்கி அணிந்துகொள்ளும் சுதந்திரத்தைப் பெறுவர். புதிய மாற்றம் அனைவரையும் அரவணைக்கும் வகையில் அமையும். ஆசியானில் அத்தகைய நடைமுறையை அறிமுகப்படுத்தவிருக்கும் முதல் விமான நிறுவனம் ஏர்ஏஷியா.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் புதிய சீருடை அறிமுகம் காணும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வோர் ஊழியரும் வேலையைத் திறம்படச் செய்வதற்கு நம்பிக்கையுடன் இருப்பது முக்கியம் என்று நிறுவனம் கருதுவதைப் புதிய மாற்றம் பிரதிபலிக்கிறது.
ஏர்ஏஷியாவின் நிபுணத்துவத் தோற்றத்தைக் கட்டிக்காக்கும் வகையில் தலையங்கியைத் தெரிவுசெய்யும் சிப்பந்திகள், முழுக்கைச் சட்டையையும் கால்சட்டையையும் அணிய வேண்டும் என்று கூறப்பட்டது.
புதிய மாற்றம், மேலும் பலர் வேலையில் சேர்வதற்குத் தூண்டும் என்று நிறுவனம் நம்புகிறது.
ஏர்ஏஷியா விமான நிறுவனத்தின் பெண் முஸ்லிம் சிப்பந்திகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் தலையங்கி அணிந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

