நியூயார்க்: ஐபோன்களைத் தயாரிக்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம் ஆட்குறைப்பு செய்துள்ளது. ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடப்பது அரிதான ஒன்றாகும்.
ஆட்குறைப்பில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் சில வாரங்களுக்கு முன்னரே தலைமைத்துவ அதிகாரிகள் பேசியதாகக் கூறப்படுகிறது.
எத்தனை பேர் ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவலை ‘ஆப்பிள்’ நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் ஆட்குறைப்பு செய்ததை அது உறுதிசெய்துள்ளது.
நிறுவனங்கள், பள்ளிகள், அரசாங்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு நேரடியாகப் பொருள்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் ஆப்பிள் விற்பனை நிலையங்களில் பொருள்கள் குறித்து விளக்கிக் கூறும் ஊழியர்களும் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர்.
“அதிகமான வாடிக்கையாளர்களுடன் இணையும் நோக்கில் விற்பனைக் குழுவில் சில மாற்றங்ளைச் செய்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து ஆட்களை வேலைக்கு எடுத்து வருகிறோம். ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களும் அந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்,” என்று ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தக் காலாண்டில் மட்டும் அது 182.7 பில்லியன் வெள்ளி விற்பனையை எட்டவுள்ள நேரத்தில், ஆட்குறைப்பை அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

