தோக்கியோ: ஜப்பானின் பத்து மாநிலங்களில் வெளிநாட்டவர் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இருமடங்கிற்கு மேல் அதிகரித்துவிட்டது.
‘கியோடோ நியூஸ்’ செய்தித்தளம் சனிக்கிழமை (நவம்பர் 22) தொகுத்து அளித்த தரவுகளில் இந்தத் தகவல் காணப்படுகிறது.
குறிப்பாக, ஜப்பானின் தென்மேற்குப் பெருந்தீவான கியூஷுவின் குமாமோட்டோ மாநிலத்தில்தான் வெளிநாட்டவர் அதிகமாகக் குடிபுகுந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் அங்கு அவர்களின் எண்ணிக்கை மும்மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள பத்து மாநிலங்களில் ஹொக்கைடோ, ஒக்கினாவா கியூஷு தீவின் இரண்டு மாநிலங்கள் ஆகியன முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
‘தைவான் செமிகண்டக்டர்’ நிறுவனம் தனது பெருமளவு உற்பத்தியைக் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் குமாமோட்டோ மாநிலத்தில் தொடங்கியது. வெளிநாட்டவர் அங்கு குடியேறியதற்கு அது முக்கிய காரணம்.
ஜப்பானுக்குப் படிக்க வரும் அனைத்துலக மாணவர்கள் பட்டம் பெற்ற பின்னர் அங்கேயே தங்குமாறு அவர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் நடப்பில் உள்ளன. அதுவும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு காரணம்.
2015 ஜனவரி 1 முதல் இவ்வாண்டு வரை எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஜப்பானின் 47 மாநிலங்களிலும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 1.78 விழுக்காடு அதிகரித்து உள்ளது.

