மாஸ்கோ: உக்ரேன் அமைதித் திட்டம் பற்றிய எவ்வித அதிகாரபூர்வ ஆவணங்களையும் தான் அமெரிக்காவிடம் இருந்து பெறவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா கொடுத்த 28 பக்க அமைதித் திட்டத்தை உக்ரேனிய அரசாங்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அந்த அமைதித் திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த தான் தாயராக இருப்பதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் தொடர்புகள் ஏற்பட்டிருந்தாலும் அமைதித் திட்டம் பற்றிய விவாதங்கள் இடம்பெறவில்லை என்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) ரஷ்ய அரசாங்கப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
“அமெரிக்காவிடம் குறிப்பிட்ட பரிந்துரைகள் இருக்கலாம். ஆனால், ஆணித்தரமாக எதுவும் பேசப்படவில்லை. இருப்பினும், அமைதிக்கான பரிசீலனைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஷ்ய ராணுவம் போர்க்களத்தில் முன்னோக்கிச் செல்வதால், உக்ரேனுக்கு அமைதிப் பேச்சுவார்த்தையை நாடுவதையன்றி வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அமைதித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்திய உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஆக்ககரமான, நேர்மையான, காலத்துக்கேற்ற பணிகளைச் செய்ய தாம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

