உக்ரேன் அதிபரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
வாஷிங்டன்: உக்ரேன் மீது அடுத்த மாதம் ரஷ்யா படையெடுப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
உக்ரேன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய அவர், இவ்வாறு சொன்னதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
இதற்கிடையே, ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்துவிட்ட நிலையில், நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான நம்பிக்கை சிறிதளவு உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரேன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது, அண்மைய வாரங்களில் பெரும் பதற்றத்தைத் தூண்டியுள்ளது. இருப்பினும் உக்ரேன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்றே ரஷ்யா தொடர்ந்து கூறுகிறது.
அரசதந்திர ரீதியில் இதற்குத் தீர்வு காண்பது குறித்தும் பைடனுடன் பேசியதாக உக்ரேன் அதிபர் சொன்னார்.
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் அச்சுறுத்தல் போக்கு குறித்து ஐநா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, உக்ரேன் மீது படையெடுத்தால், அது எரிவாயு குழாய் திட்டத்தைப் பாதிக்கும் என்று அமெரிக்காவும் ஜெர்மனியும் ரஷ்யாவை எச்சரித்துள்ளன.
இந்நிலையில், உக்ரேனின் தெற்கே கருங்கடலில் ரஷ்ய போர்க்கப்பல்கள் பீரங்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.
சென்ற புதன்கிழமை முதல் 20 போர்க்கப்பல்கள் வான்வழி, கடல் இலக்குகளை நோக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன என்றும் இப்பயிற்சி நேற்றுடன் முடிவடையஇருந்ததாகவும் அது கூறியது.
அத்துடன் உக்ரேன் எல்லையை ஒட்டிய தெற்கு ரோஸ்டோவ் பகுதியில் உள்ள ரஷ்ய பீரங்கி படைகள் எதிரி படைகள், கவச வாகனங்களை அழிக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
கனரக ஆயுத வாகனங்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, உக்ரேனில் தரை உறைந்து போகும் வரை ரஷ்யா காத்திருப்பதாகச் சில ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.