வாஷிங்டன்: கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிராக ஆற்றலுடன் செயல்படும் புதிய சிகிச்சைமுறைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகளுக்காக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.9 பில்லியன்) செலவிடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதில் ‘ரீஜெனரான்’ மருந்து நிறுவனத்துடன் நோயெதிர்ப்புப்பொருள் சிகிச்சைக்காகப் போடப்பட்ட ஒப்பந்தமும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ரீஜெனரானுக்கு வழங்கப்படும் நிதி, அமெரிக்கச் சுகாதாரம், மனித சேவைகள் துறையால் உருவாக்கப்பட்ட ‘புரொஜெக்ட் நெக்ஸ்ட்ஜென்’ என்னும் ஐந்து அமெரிக்க பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
முன்பு கொவிட்-19க்கு எதிராக ஒற்றை உயிரணு நோயெதிர்ப்புப் பொருள் சிகிச்சையை ரீஜெனரான் உருவாக்கியது.
அது அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்தால் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
ஆனால், ஓமிக்ரான் திரிபுக்கு எதிராக அது வீரியமாகச் செயல்படவில்லை எனக் கண்டறியப்பட்டதால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது.