விஷாலுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதில் அரசியல் காரணங்களால் விஷாலின் ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறுகிறார் நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான விஷால். தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'டெம்பர்' படத்தை, தமிழில் 'அயோக்யா' என்ற பெயரில் மறுபதிப்பு செய்து நடித்து வருகிறார் விஷால். இதில் அவருடன் ராசி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், பூஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். வெங்கட் மோகன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் படப்பிடிப்பு விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள கூனிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் விஷால் படப்பிடிப்பு நடக்க இருந்தது. அதற்காக சம்பந்தப் பட்ட அதிகாரிகள், மற்றும் போலிசிடம் அனுமதி பெறப் பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை யில் படப்பிடிப்புக் குழுவினர் அந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கு வந்த அரசு அதிகாரிகள், "இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது அருகில் மசூதி இருப்பதால் அவர்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்," என்று கூறியுள்ளனர். படப்பிடிப்புக் குழுவினர் அனுமதிக் கடிதத்தை காட்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு நடத்தாமல் படக்குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

