நடிகர் வடிவேலு 'இம்சை அரசன் புலிகேசி' படத்தில் நடித்ததில் இருந்து அவருக்கு பல இம்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'இம்சை அரசன் 24=ம் புலிகேசி'. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து அதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து விவாதித்து வந்தது தயாரிப்பாளர் சங்கம்.
இறுதியாக 'வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்துகொண்டு படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை, சம்பளத் தொகை அனைத்தையும் சேர்த்து வட்டியுடன் திருப்பிக் கொடுக்கவேண்டும்' என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் வடிவேலு தரப்பினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த முடிவு குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பினார் வடிவேலு. ஆனால், தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வந்ததால் இயக்குநர் சிம்புதேவன் படத்தில் நடித்து முடிக்கும் வரை வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்யவேண்டாம்,' என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

