ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக 72 வயதான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் இருந்து வருகிறார். அவர் வேறு யாருமல்லர், ரஜினிகாந்த்தான்.
ஷாருக்கான், சல்மான்கான், அக்சய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களைவிடவும் இவர் அதிக அளவில் சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் ஒரு படத்திற்கான சம்பளம் ரூ.280 கோடியை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சினிமாவின் அதிகார மையம் ஹாங்காங்கில் இருந்தது. புரூஸ் லீ, ஜாக்கி சான் போன்ற சூப்பர் ஸ்டார்களின் பெயர்கள்தான் உலகெங்கிலும் பரவலாகப் பேசப்பட்டது.
பின்னர், 21ஆம் நூற்றாண்டில் ஷாருக்கான், சல்மான் கான், அக்சய் குமார் போன்றவர்கள் உலக அளவில் பிரபலமடைந்ததால் அது பாலிவுட் திரையுலகை பிரபலப்படுத்தியது.
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளதால் கோலிவுட் திரையுலகம் உலகெங்கும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்திற்காக ரஜினிகாந்த் ரூ.280 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது 171வது படமாகும்.
இது ‘ஜெயிலர்’ படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய ரூ.250 கோடி சம்பளத்தையும் 2016ல் அமீர்கான் ‘தங்கல்’ படத்திற்காக வாங்கிய ரூ.275 கோடி சம்பளத்தையும் முறியடித்திருக்கிறது.
ஷாருக்கான் ‘பதான்’, ‘ஜவான்’ படங்களுக்குத் தலா ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியதாகவும் சல்மான்கான் தனது படங்களுக்கு ஏறக்குறைய 100-150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

