நீண்ட நாள்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய செய்தி. இப்போதுதான் உறுதியாகி இருக்கிறது.
வேறொன்றுமில்லை, நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் இயக்கும் படத்துக்கு ‘சரஸ்வதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாயகியை முன்னிலைப்படுத்தும் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதும் வரலட்சுமிதான்.
மேலும், பிரியாமணி, நவின் சந்திரா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமன் இசையமைக்க, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் படம் தயாராகிறது.
‘தோசா டைரீஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இந்தப் படத்தை தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து தயாரிக்கிறார் வரலட்சுமி.
பூஜா, இதற்கு முன்பு ‘ரேடான்’ நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.
‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான வரலட்சுமி, பின்னர் குணச்சித்திர, வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். எனினும், தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் பிற தென்னிந்திய மொழிகளில் நடிக்கத் தொடங்கினார்.
அண்மைக்காலமாக வரலட்சுமி நடிக்கும் தெலுங்குப் படங்களுக்கு திரைச்சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.