தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா.
தமது வாழ்க்கை,தொழில் பயணத்தில் தாம் எதிர்கொண்ட சவால்கள்குறித்து மனம் திறந்து அவர் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
குறிப்பாக, அவரது படங்களின் தோல்விகள், தனிமை எப்படிப்பட்ட புரிதலை அவருக்கு அளித்தது போன்றவற்றை குறித்து அவர் விளக்கியுள்ளார்.
வெளியீடு கண்ட தமது படங்களின் முடிவால் மகிழ்ச்சியை இழந்ததாகவும் ஆனால் கடந்த இரு ஆண்டுகளாகத் தமது நடிப்பில் படங்களே வெளியாகாமல் இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சமந்தா கூறியுள்ளார்.
திரையுலக வாழ்க்கையில் நடிகர்களின் பயணம் நீண்டதன்று எனத் தெரிவித்த அவர், நட்சத்திரமாகக் கிடைக்கும் புகழ், வெற்றிகளுக்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மட்டுமே காரணமன்று என்றார்.
மேலும், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் நிறைய அதிர்ஷ்டமும் கடவுளின் அருளும் உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
100 பிரச்சினைகள் இருப்பதாகப் பலரும் நினைக்கும் சூழலில், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் வரும்போது, அது ஒன்று மட்டுமே நமக்குப் பிரச்சினையாகத் தெரியும் எனத் தமது உடல்நலப் பிரச்சினை மூலம் தாம் கற்றுக்கொண்டதை சமந்தா விவரித்துள்ளார்.
விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது முக்கியமன்று, விளையாட்டைத் தொடர்வதுதான் முக்கியம் என்றார் அவர்.