தமிழில் நாயகனாகவும் தெலுங்கில் நாயகன், வில்லனாக நடித்து வரும் ஆதி தற்பொழுது தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழில் ஆதி இறுதியாக ‘சப்தம்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிறு வெளியான தெலுங்குப் படமான ‘அகண்டா 2’ படத்தின் முன்னோட்டக் காட்சியில் சில வினாடிகளே இடம் பெற்ற ஆதியின் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
படத்தில் அவருக்கு அகோரி கதாபாத்திரத்திரம் எனத் தெரிகிறது. அகோரியாக இருக்கும் ஆதியைப் பார்த்து வீர வசனம் பேசி, தன்னைத் தாக்க வந்தவர்களை சூலாயுதத்தை சுற்ற வைத்து துவம்சம் செய்யும் பாலகிருஷ்ணாவின் அதிரடி காட்சி அவரது ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக இந்த முன்னோட்டக் காட்சி 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
எவ்வளவோ ‘டிரோல்கள்’ வந்தாலும் பாலகிருஷ்ணா படம் கடந்த சில ஆண்டுகளாக வசூலில் குறை வைக்காமல் லாபத்தைத் தருவது குறிப்பிடத்தக்கது.