நடிகர் அஜித் நடித்திருக்கும் இரண்டு படங்களும் பொங்கலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக சில தகவல்கள் வருகின்றன. இருப்பினும் ஒரே நேரத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்பே இல்லை என்கிறது கோலிவுட்.
அதுவும் அஜித் போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தின் படங்கள் ஒரே சமயத்தில் கண்டிப்பாக வெளியாகாது என்றாலும் இதுபோன்ற தகவல்கள் பரவி வருவதால் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் அறிவிப்பின் போதே இப்படம் பொங்கல் 2025 வெளியீடு என தெரிவிக்கப்பட்டது. ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பை பெரும்பாலும் வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே இந்தப் படத்தில் இருந்து சில காட்சிகள் வெளியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அஜித் இந்தப் படத்திற்காக 8 கிலோ எடையை குறைத்து நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அது அண்மையில் வெளிவந்த அஜித்தின் புகைப்படம் மூலம் உறுதியாகி உள்ளது. அதனால் எடை குறைந்த அஜித்தைப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தீபாவளியன்று வெளியாகும் என சொல்லப்பட்ட ‘விடாமுயற்சி’ திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது தான் தற்போது அஜித் ரசிகர்களின் குழப்பத்திற்கு காரணம்.
தொடர்புடைய செய்திகள்
ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களும் வெளியானால் அது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக கொண்டாட்டமாக இருக்காது என்பது உறுதி. ஒரே சமயத்தில் இரு பெரும் படங்கள் வெளியானால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், வசூல் பாதியாகக் குறையும்.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு கண்டிப்பாக இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகாது என்றே தெரிகிறது. இருப்பினும் தற்போது வரை ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றுதான் தகவல்கள் வருகின்றன. எனவே இந்தப் பொங்கலுக்கு அஜித் vs அஜித் போட்டி தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதைத் தவிர, பொங்கல் பண்டிகைக்கு அருண் விஜய்யின் ‘வணங்கான்’ திரைப்படமும் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படமும் வெளியாகின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தள்ளி வைக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்து இருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வந்தால் ரசிகர்களின் குழப்பம் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.