சென்னையில் நடைபெற இருந்த இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காக, ஏறக்குறைய 30 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் அரைமணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நிறைய முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து டிக்கெட் கேட்டு பலவகையிலும் அழுத்தங்கள் வந்ததால், ஏற்பாட்டாளர்களால் சமாளிக்க முடியவில்லையாம்.
கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்க காவல்துறையின் அனுமதியும் கிடைக்காததால்தான் நிகழ்ச்சி ரத்தானதாகக் கூறப்படுகிறது.
எனினும், அனிருத்தின் தீவிர ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத வகையில், மிக விரைவில் மாற்றுத்தேதி அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.