இப்போதெல்லாம் நகைச்சுவை நடிகர்களும் கதாநாயகர்களாக மாறி வருகின்றனர்.
எந்த நகைச்சுவை நடிகர் எப்போது கதாநாயகனாக உயர்வார் என்பது அவருக்கே தெரியுமா என சந்தேகம் ஏற்படும் அளவுக்கு திடீர் திடீரெனப் புது அறிவிப்புகள் வெளியாகின்றன.
அந்த வரிசையில், இப்போது வில்லன் நடிகர் ரவி மரியாவும் கதாநாயகனாக மாறுகிறார். ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ராதா ரவியும் ரவி மரியாவும் கதை நாயகர்களாக ஒப்பந்தமாகி உள்ளனர்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகுமாம். ‘அழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கிய ராம்தேவ் இயக்கத்தில், ரவி மரியா நாயகனாக நடிக்கும் படம் உருவாகிறது.
இப்படத்தில் கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு, நிழல்கள் ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
இது நகைச்சுவையும் அரசியலும் சமவிகிதத்தில் கலக்கப்பட்டு உருவாகும் படம் என்று தகவல்.
“கதைப்படி ரவி மரியாவும் ராதா ரவியும் இணைந்து அரசியல் செய்கிறார்கள். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்தாலும், சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளைக் கூறுகிறோம். மற்ற வணிக அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்,” என்கிறார் இயக்குநர் ராம்தேவ்.
ரவி மரியாவுக்குப் பொருத்தமான நாயகியைத் தேடும் படலம், வட இந்தியாவில் நடைபெறுவதாகத் தகவல். படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு முதற்கட்டப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் தமிழகத்தின் தேனி பகுதியில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

