விபத்தில் சிக்கியதால் கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு திரையுலகில் இருந்து சில காலம் விலகியிருந்ததாக நடிகர் அரவிந்த்சாமி கூறியுள்ளார்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், விபத்துக்குப் பின் தாம் பெற்ற சிகிச்சை குறித்தும் பேசியுள்ளார்.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் தாம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்ததாகவும் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று தாம் முடிவெடுத்ததால் நீண்டகாலம் வலியுடன் தாம் சிகிச்சை பெற நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர், அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தபோது கேரளாவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரைச் சந்தித்தாராம். அந்த மருத்துவர் சிகிச்சை மேற்கொண்ட மூன்றாவது நாளிலேயே தம்மால் எழுந்து நடமாட முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
“அதற்கு முன்பு வரை ஆயுர்வேத சிகிச்சையில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை.
“எனக்கு அந்த சிகிச்சை சரியாக வேலை செய்தது. ஆனால், இதையே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.
“ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் உள்ளது. அதுதான் எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் ஞானம் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் பலமுறை எனக்கு உதவியுள்ளது,” என்று பேசியுள்ளார் அரவிந்த்சாமி.

