அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் அறிவியல் புனைகதையைக் கொண்ட திரைப்படத்தை அட்லி இயக்குகிறார்.
அதிக பொருட்செலவில் உருவாகிவரும் அப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நாயகிஇணைந்துள்ளனர். இதில், அல்லு அர்ஜுன் நான்கு வேடங்களில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.
அனைத்துலகத் தரத்துடன் இந்தியாவில் தயாராகும் படமாக இது இருக்கும். இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவில், மிகவும் பிரம்மாண்டமாகப் புதுப்படம் தயாராகி வருவதாக அப்படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இரு பாகங்களாக உருவாகிவரும் அப்படத்தில், தற்போது இந்தி நடிகர் டைகர் ஷெராஃப் இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், திரைக்காட்சியிடையே மீள்நினைவு (பிளாஷ்பேக்) காட்சிகளில், முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

