எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி தமிழ்த் திரையுலகில் தனக்கான இடத்தைத் தக்கவைப்பதில் முனைப்பாக உள்ளார் ‘கலக்கப்போவது யார்’ (கேபிஒய்) பாலா.
ஒரு புதுப்படத்தில் நடிப்பதற்காகச் சில மாதங்கள் பேட்மின்டன் பயிற்சியில் ஈடுபட்டாராம்.
‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான பாலா, தற்போது இரண்டாவதாக ‘ரீமேட்ச்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
அண்மைக்காலமாக தன்னைப் பற்றி வெளிவரும் எதிர்மறைக் கருத்துகள், தகவல்கள் குறித்து அறவே கண்டு கொள்வதில்லை என்று கூறியுள்ள அவர், அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கினால் வாழ்க்கையில் முன்னேற இயலாது என்கிறார்.
இந்நிலையில், ‘ரீமேட்ச்’ படச் பூசை சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பாலா, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
“தமிழில் முதல்முறையாக பேட்மின்டன் விளையாட்டை வைத்துக் கதை எழுதியிருக்கிறார்கள். நான் இந்த படத்தின் நாயகனாக நடிக்க வேண்டும் என்று விரும்பி, என்னிடம் கதை சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
“கதை சொல்லும்போது நான் ‘பேட்மின்டன் ஆட்டக்காரர்’ என்பது இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் தெரியாது. எனக்கும் விளையாடி நீண்ட நாள்களாகிவிட்டது. எனவே, எட்டு மாதங்கள் பேட்மின்டன் பயிற்சி மேற்கொண்டேன். அதன் பிறகே படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார் பாலா.

