‘காந்தா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த இளம் நாயகி பாக்யஸ்ரீ, உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
அண்மையில் ’அஜந்தா எல்லோரா’ திரைப்பட விழாவில் இளையராஜா கையால் விருது வாங்கியதுதான் இதற்குக் காரணம்.
அவருக்கு எந்த நோக்கத்துக்காக விருது அளிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் பதில் அளிக்க பாக்யஸ்ரீக்கு நேரமில்லை.
விருது அறிவிக்கப்பட்டால் அதற்குரிய மரியாதை அளித்து வாங்க வேண்டும் என்று விளக்கம் அளித்தவர், இளையராஜா கையால் விருது வாங்கியது பெரும் பாக்கியம் என்றார்.
“என் வாழ்வின் தொடக்கத்திலேயே இப்படியோர் அற்புதம் நிகழ்ந்ததை மறக்கவே இயலாது,” என்று கூறி மகிழ்கிறார் பாக்யஸ்ரீ.
விருதைப் பெற்றபோது இளையராஜாவிடம் ‘நன்றி’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு எதுவும் பேசக்கூடாது என்று விழா ஏற்பாட்டளார்கள் கூறியிருந்தார்களாம்.
ஒருவேளை இளையராஜா ஏதாவது பேசினாலும், பதிலுக்கு ‘நன்றி’ என்ற ஒரே வார்த்தையைத் தவிர வேறு எதுவும் சொல்லக்கூடாது என்றும் உத்தரவிடாத குறைதானாம்.
மேலும், புகைப்படம் எடுக்கும்போது இளையராஜாவைப் பார்க்கக்கூடாது என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்கள் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் பாக்யஸ்ரீ இது குறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை. விருதைப் பெற்றதும் இளையராஜவை பார்த்து, தன் கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து, பெரிதாகச் சிரித்தபடி நன்றி தெரிவித்தார்.
விருது மேடையில் எந்தவிதமானப் பதற்றமும் தயக்கமும் இல்லாமல் அவர் செயல்பட்டது பலரால் பாராட்டப்படுகிறது.

