சிறு வயதில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தமக்கு ரூ.500 மட்டுமே சம்பளமாகக் கிடைக்கும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
எனினும், அப்போது கிடைத்த மகிழ்ச்சி இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்போது இல்லை என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணங்கள், மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றால் ரூ.500 சம்பளம் கிடைக்கும். சில சமயங்களில் வெறுமனே வெற்றிலையும் பாக்கும் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். ஆனாலும் மனத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றும் என்று அனிருத் கூறியுள்ளார்.
தற்போது பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதாகவும் பழைய மனநிறைவு இப்போது கிடைக்கவில்லை என்றும் அப்பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அனிருத்.
இளம் வயதில் தாம் கடந்து வந்த மகிழ்ச்சியான அந்த நாள்களைத் தம்மால் ஒருபோதும் மறக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

