‘பிரேமம்’ படம் மூலம் மலையாளம், தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், “பல நூறு தடைகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளிப்பேன். ஏனெனில், திரையுலகில் பணியாற்றுவதற்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது,” என்று கூறியுள்ளார்.
இவர், மலையாள நடிகர் சுரேஷ் கோபியுடன் நடித்துள்ள ‘ஜானகி வெட்ஸ் ஸ்டேட் ஆப் கேரளா’ என்ற படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனுபமா, தனக்கு நடிக்கத் தெரியாது என பலரும் விமர்சனம் செய்து வருவதாக ஆதங்கம் தெரிவித்தார்.
இந்நிலையில், “இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்சினை. சிம்ரன், நயன்தாரா, அசின் போன்ற நடிகைகளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்,” என்று அனுபமாவுக்கு ஆதரவாக நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அனுபமா, “என்னை தொடர்ந்து விமர்சித்து வருவதும், அதனால் நான் பாதிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால், அந்த விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, என்னை நானே மெருகேற்றி வருகிறேன். எனக்குப் பொருந்தும் கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார்.