இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் தற்போது நடித்துவரும் திரைப்படம் ‘ஸ்பிரிட்’.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதில் இருந்து நடிகை தீபிகா படுகோன் திடீரென விலகியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இயக்குநருக்கும் தீபிகாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால் அவர் விலகியதாகத் திரையுலகில் முன்னர் காரணம் சொன்னார்கள்.
மேலும், படப்பிடிப்பில் இத்தனை மணிக்குத்தான் வருவேன் எனத் தீபிகா தரப்பில் கறாராகச் சொன்னதாகவும் செய்திகள் அப்போது பரவின.
இந்தச் சூழலில், ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரனய் ரெட்டி வங்கா இவ்விவகாரம் குறித்துத் தற்போது விளக்கமளித்துள்ளார்.
“இப்படத்திற்காகச் சுமார் ஒரு வருட காலம் தீபிகா தனது நேரத்தைச் செலவழித்தார்,” என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரரான பிரனய் ரெட்டி வங்கா கூறியுள்ளார்.
மேலும், “படத்தின் கதையும் கதாபாத்திரமும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.
“படம் குறித்து இயக்குநரும் தீபிகாவும் பல முறை நேரில் விரிவாக ஆலோசித்துள்ளார்கள்,” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆனால், படத்தின் வியாபாரம், படப்பிடிப்பு குறித்த பேச்சுவார்த்தையின்போது முரண்பாடு ஏற்பட்டது.
“இந்தப் படத்தின் லாபத்திலிருந்து 10 விழுக்காட்டுப் பங்கு வேண்டுமென தீபிகா குழு கேட்டது.
“படப்பிடிப்பு நேரம் குறித்தும் இருதரப்புக்கும் இடையே சில முக்கியப் பிரச்சினைகள் வந்தன. இதனால்தான் தீபிகா படத்திலிருந்து விலகினார்,” என்று தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


