இந்தித் திரையுலக நட்சத்திர இணையரான ரன்வீர் சிங், தீபிகா படுகோனின் தொழில் அர்ப்பணிப்பையும் குடும்பப் பொறுப்புகளையும் கண்டு ஒட்டுமொத்தத் திரையுலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது.
அண்மையில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,700 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மாபெரும் வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன்வீர் தற்போது தமது புதிய பட வேலைகளைத் தள்ளிவைத்துவிட்டு, வீட்டில் தம் மகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
மறுபுறம், தாய்மை அடைந்துள்ள நிலையிலும் தமது கடமையை முன்னிட்டு, தீபிகா நடிகர் ஷாருக்கானுடன் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பிற்காகத் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.
கர்ப்ப காலத்திலும் ஷாருக்கானுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காகத் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படும் சவாலான காட்சிகளில் அவர் பங்கேற்றுவரும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
தீபிகா படப்பிடிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பும்வரை, ஒரு தந்தையாகவும் தாயாகவும் தம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ரன்வீர் சிங் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருப்பது இந்தித் திரையுலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

