‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் தீபிகா படுகோன்.
அவர் விதித்த பல்வேறு நிபந்தனைகள்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் பாகத்தில் நாயகன் பிரபாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா. அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
பெரும் வசூல் கண்டுள்ள இப்படம், உலகம் முழுவதும் ரூ.1,100 கோடி வசூலித்தது. இதையடுத்து உருவாகும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பட்டுள்ளதாம். இதனால் தமக்கு முக்கியத்துவமின்றிப் போகும் என்று கருதினாராம் தீபிகா.
மேலும், முதல் பாகத்தைவிட 25% கூடுதல் சம்பளம், லாபத்தில் பங்கு, 25 உதவியாளர்களுக்கு ஊதியம், ஐந்து நட்சத்திரத் தங்குவிடுதி செலவு என்று அவர் பல்வேறு நிபந்தனைகளை வரிசையாக அடுக்க, பதறிப்போன தயாரிப்புத்தரப்பு ஓட்டமெடுத்ததாகத் தகவல்.
அனைத்தையும்விட, நாள்தோறும் ஏழு மணிநேரம் மட்டுமே வேலை பார்க்க முடியும் என்றும் தீபிகா கூறியதால், அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தீபிகா தரப்போ, அவரே தாமாக முன்வந்து விலகியதாகக் கூறிவருகிறது.