தேனாண்டாள் திரைப்பட நிறுவனம், நடிகர் தனுஷுக்கு எதிராக 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் மூலம் சட்ட ரீதியான அறிவிப்பை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, பாதியில் நின்ற திரைப்பட விவகாரமே இதற்குக் காரணம்.
கடந்த 2016ஆம் ஆண்டு, தனுஷ் இயக்கி நடிப்பதற்காக ‘நான் ருத்ரன்’ என்ற திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது.
நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் அதில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
திரைப்படத்திற்கான திரைக்கதையை தனுஷ் முழுமையாக முடிக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் இறுதிக்கட்ட திரைக்கதையை வழங்காமலேயே வேறு படங்களில் நடிக்கச் சென்றுவிட்டதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
அதனால் படத்துக்காகச் செலவிடப்பட்ட முன் தயாரிப்புப் பணிகள், நடிகர்களுக்கான முன்பணம், ஊதியம் என மொத்தம் 20 கோடி ரூபாய் வீணாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ஒரு வார காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தை உடனடியாக முடித்துத் தருவதாக உறுதியளிக்க வேண்டும்.
இல்லையெனில், செலவு செய்யப்பட்ட 20 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும்.
மேலும் தாமதப்படுத்தினால், அபராதமாக கூடுதல் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்குத் தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எவ்விதப் பதிலும் வரவில்லை.
தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மம்முட்டியுடன் இணையும் புதிய படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

