‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியீட்டுக்குத் தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும், விக்ரம் நடித்துள்ள இப்படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இன்னும் திரைகாணாமல் முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ள சிம்ரன், அண்மைய பேட்டியில் விக்ரம் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
“அனைவரையும்போல் நானும் இப்படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன். விக்ரம் மிக அற்புதமான நடிகர். ‘துருவ நட்சத்திரம்’ முழுநீள அதிரடிப் படம்.
“சரியான நேரத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். எப்போது வெளியானாலும் படம் வெற்றிபெறும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.
“ஏனெனில் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான படைப்பாக இதை உருவாக்கி உள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்,” என்று கூறியுள்ளார்.
இது போதாதா, விக்ரம் ரசிகர்கள் இதைக்கேட்டு உற்சாகமாகிவிட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘மத கஜ ராஜா’ படத்தின் வெற்றியைப் போல், ‘துருவ நட்சத்திரம்’ படமும் சாதிக்கும் எனக் கூறி வருகின்றனர்.