இயக்குநர் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் பாரதி, 48 மாரடைப்பால் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் மனோஜ். உதவி இயக்குநராக மணிரத்னத்திடம் வேலை பார்த்தார். இயக்குநராக வேண்டும் என சினிமாவிற்கு வந்தவர் தந்தையால் நடிகர் ஆனார்.
அப்பா பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கினார். தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘கடல் பூக்கள்’ போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். அதன்பின் குணச்சித்ர நடிகராக மாறிய அவர் ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’, ‘மாநாடு’, ‘விருமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கினார். இடையில் தனது அப்பாவின் விருப்பமான படமான சிவப்பு ரோஜாக்கள் படத்தினை இந்தக் காலத்திற்கு ஏற்றபடி மறுபதிப்பு செய்ய போவதாக அறிவித்தார். அதுதொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு இருந்தார்.
அண்மைக்காலமாக உடலில் அவருக்கு சில பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக ஓரிரு வாரத்திற்கு முன்னர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன்பின் உடல்நலம் தேறி வந்தவர் சென்னை, தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் திடீரென மார்ச் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மனோஜிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை அழைத்து பார்த்துள்ளனர். ஆனால், அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
மலையாள நடிகையான அஸ்வதி என்ற நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மனோஜ். இவர்களுக்கு அர்ஷிதா, மதிவதனி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
அதேநாளில் கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹூசைனி ரத்த புற்றுநோயால் மறைந்தார். அந்த செய்தியே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அதற்குள் மனோஜின் திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ந்து பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மனோஜின் உடல் சேத்துபட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு செய்தி அறிந்து நடிகர்கள் கார்த்தி, இளவரசு, உதயா, இயக்குனர்கள் ராஜ் கபூர், ஆர்கே செல்வமணி, ராம், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ் குமார், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறியும், மனோஜிற்கு அஞ்சலியும் செலுத்தினர்.
இறுதிச்சடங்கு சென்னையிலா அல்லது பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியிலா என்று இன்று முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என கூறியுள்ளார்.
பாரதிராஜாவின் நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா இரங்கல் தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது நண்பர் பாரதியின் மகனான மனோஜ் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். என்ன சொல்வது என்றே வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம். நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று காலம் விதித்திருக்க வேண்டிய காரணத்தால் மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்,” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கலை உலகத்தினர் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.