நயன்தாரா ஒதுங்கிச் சென்றாலும் சர்ச்சைகள் அவரை விடுவதாக இல்லை.
கடந்த ஆண்டு தனது திருமணம் தொடர்பான ஆவணப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார் நயன்தாரா.
அதில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நயன்தாரா மீது வழக்கு தொடுத்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.
இந்நிலையில், ‘சந்திரமுகி’ படத்தின் தயாரிப்புத் தரப்பும் நயன்தாராவிடம் ஐந்து கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
‘சந்திரமுகி’ படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. இப்படத்தின் சில காட்சிகளும்கூட நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், நயன்தாராவிடம் நஷ்டஈடு கேட்கவில்லை என ‘சந்திரமுகி’ படத்தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சந்திரமுகி’ படக்காட்சிகளைப் பயன்படுத்த ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.
இதற்கிடையே, துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ள நயன்தாரா, மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கத் தொடங்கி உள்ளதாகத் தகவல்.