பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் மற்றும் நடிகரான பர்ஹான் அக்தரின் ‘டான் 3’ படத்தில் நடிக்க இருந்தார்.
படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடைசிக் கட்டத்தில் ரன்வீர் சிங் அப்படத்தில் இருந்து விலகினார்.
‘துரந்தர்’ திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் ரன்வீர் சிங் ‘டான் 3’ படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது.
அவர் விலகியதால் ரூ.45 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தயாரிப்பாளர் பர்ஹான் அக்தர், மேற்கு இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பில் புகார் அளித்தார்.
அக்கூட்டமைப்பு, ரன்வீர் சிங் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று அறிவித்தது.
இது பரபரப்பானதை அடுத்து, திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு ரன்வீர் சிங்கிற்கு வழக்கறிஞர் கடிதம் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகள் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தின.
இதனால் ரன்வீர் சிங் மீதான தடையை உடனடியாக மேற்கு இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு திரும்பப் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வமைப்பின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “இந்த விஷயத்தில் யாரும் வெற்றி பெறவில்லை. அதே நேரம் தோற்கவும் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வண்ணம், கலந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படம் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. முதல் படத்தைப் போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

