சாலை விபத்தில் தான் சிக்கியதாகப் பரவிய வதந்திகளுக்குத் தமது இன்ஸ்டகிராம் பதிவின்மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை காஜல் அகர்வால்.
அண்மையில், நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி தீவிர காயம் அடைந்திருப்பதாக வதந்திகள் பரவின.
இதனால், விரைவில் காஜல் குணமடைய அவரது ரசிகர்கள் ஆதரவையும் வேண்டுதல்களையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர்.
“நான் விபத்தில் சிக்கிவிட்டதாகச் சில ஆதாரமற்ற செய்திகள் பரவின.
“ஆனால், அது உண்மையன்று. நான் மிகவும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.
“பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். நேர்மையான், உண்மையான தகவல்களில் கவனம் செலுத்துவோம்,” என காஜல் தமது இன்ஸ்டகிராம் பதிவில் விளக்கமளித்தார்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் சிக்கந்தர், கண்ணப்பா போன்ற படங்களில் நடித்திருந்த காஜல் அடுத்ததாக கமலஹாசனின் ‘இந்தியன் 3’ படத்தில் நடித்துள்ளார்.
அப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகிவரும் ராமாயணா படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் காஜல் நடிக்கவுள்ளார்.