புதிய திரைப்படமான ‘கான் சிட்டி’ மூலம் நடிகர் அர்ஜுன் தாஸ் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார்.
அதிரடி, திரில்லர், உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவையானத் தகவல்களையும் தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.
“அந்தக் கருத்துகள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும் நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்,” என்றார் அவர்.
‘கான் சிட்டி’ குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம் என்று கூறிய அர்ஜுன் தாஸ், “ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை, மகிழ்ச்சியான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது,” என்றார்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

